தமிழ்நாடு

தருமபுரி: தூய்மைப் பணியாளரை வைத்து ஜவுளிக்கடையை திறந்து மகிழ்ந்த உரிமையாளர்

நிவேதா ஜெகராஜா

அரூரில் கொரோனா முன்கள பணியாளர்களாக இருந்த தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக, அவர்களை முன்வைத்து அவர்கள் கைகளினால் புதிய ஜவுளி கடையொன்று திறக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் பஜார் தெருவில் செந்தில்குமார் என்பவர் புதிதாக ஜவுளிக்கடை தொடங்கினார். இந்த ஜவுளிக் கடையை திறப்பின்போது, கொரோனா காலத்தில் தங்களது விலை மதிப்பில்லாத உயிர்களை, துச்சமென கருதி மக்கள் பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட வேண்டும் என செந்தில்குமார் திட்டமிட்டுள்ளார். ஆகவே தனது கடையினை முக்கிய பிரபலங்களை வைத்து திறக்க முற்படாமல், அரூர் நகர முன்கள பணியாளராக பணிபுரியும் தூய்மை பணியாளர் சாந்தி என்பவரை அழைத்து, கடையை ரிப்பன் வெட்டி திறக்க வைத்துள்ளார்.

தொடர்ந்து கடையை திறந்து வைத்த தூய்மை பணியாளர் சாந்தியே, கடையில் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். மேலும் அரூர் பேரூராட்சியில் பணிபுரிகின்ற முன்களப் பணியாளர்கள் அனைவரையும் கடைக்கு, அழைத்து அவர்களை கௌரவித்து இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கினார்.

உரிமையாளரின் இந்த செயல்பாடுகள், அரூர் பகுதியில் உள்ள மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மக்களுக்கு தெரிந்த பிரபலங்களை வைத்து கடையை திறப்பதற்கு பதிலாக, நமக்காக தினந்தோறும் பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்பதற்காக உரிமையாக செய்திருக்கும் இச்செயல்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.