Tragedy pt desk
தமிழ்நாடு

தருமபுரி: துர்நாற்றம் வீசியதால் எழுந்த சந்தேகம் - கதவை உடைத்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

webteam

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மணிக்கட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன் (35). ஆட்டோ டிரைவரான சிவன், தனது அக்கா மகள் நந்தினி (28) என்பவரை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அபி (6), தர்ஷன் (4) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் உள்ள உறவினர்கள் யாரும் இவர்களுடன் பேச்சுவார்த்தையில் இல்லாமல் இருந்துள்ளனர்.

Sivan

இந்த நிலையில் இன்று காலை சிவன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு, ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது சிவனின் மனைவி மற்றும் குழந்தைகள் சடலமான நிலையில் இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உள்பக்கம் பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சிவன் உயிருடன் இருந்த நிலையில், சிவனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சிவனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த மூவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவனின் வீட்டில் போலீஸ் விசாரணை

மனைவி மற்றும் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையல், கணவன் மட்டும் உயிருடன் இருந்ததால், சிவன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மருந்து கொடுத்துக் கொன்றிருக்கலாம் அல்லது அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்றும் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தால், சிவன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் சிவன் உயிர் பிழைத்தால் மட்டுமே இதற்கான காரணம் தெரியவரும். இந்தச் சம்பவத்தால், காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.