Couple pt desk
தமிழ்நாடு

தருமபுரி: நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறு... மனைவியை கத்தியால் குத்திய கணவன் - மகளும் காயம்

webteam

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனசேகரன் - யாசின் தம்பதியர். இவர்கள் ஷாந்தினி, ஷபானா ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். லாரி ஓட்டுனரான தனசேகரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Hospital

இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அருகில் விற்பனை செய்த நுங்கை வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது மனைவி யாசின் அதிக அளவில் நுங்கு வாங்கியதை அடுத்து ஏன் அதிக அளவில் நுங்கு வாங்கி வந்தாய் என்று தனசேகர் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, முற்றிய நிலையில், கோபமடைந்த தனசேகர், திடீரென கத்தியை எடுத்து மனைவி யாசினை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற மூத்த மகள் ஷாந்தினியை கத்தியால் தாக்கியுள்ளார்.

இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். இதையடுத்து தனசேகரை பிடித்த பொதுமக்கள் அவரை அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

arrest

இதனிடையே காயமடைந்த இருவரையும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனசேகரை அ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.