உயிரிழந்தவரின் வீடு pt desk
தமிழ்நாடு

தருமபுரி: குடும்பத் தகராறில் சமையல் மாஸ்டர் எடுத்த விபரீத முடிவு – போலீசார் விசாரணை

webteam

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் யுவராஜ். சமையல் மாஸ்டரான இவருக்கு சரண்யா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி சரண்யா கோபித்துக் கொண்டு வாணியம்பாடியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.

உயிரிழந்தவரின் வீடு

இந்நிலையில் நேற்று முன்தினம் நேரில் சென்று மனைவியை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால், மனைவி வர மறுத்ததால் மனமுடைந்து சோகத்தில் இருந்த அவர், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துறையினர் யுவராஜின் சடலத்தை கைப்பற்றி பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை

இதுகுறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.