தமிழ்நாடு

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மரணம் குறைவு - காரணம் என்ன?

jagadeesh

சென்னையில் 2018, 2019ஆம் ஆண்டுகளின் முதல் ஆறு மாதங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, கொரோனா பாதிப்புக்கு உள்ளான 2020ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தின் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இயற்கையாக, நோய்வாய்ப்பட்டு, விபத்து, தற்கொலை போன்ற காரணங்களால் ஏற்படும் மரணங்கள் குறித்த புள்ளி விவரங்களை மாநகராட்சி பதிவு செய்து வருகிறது. அதன்படி ஒரு மாதத்திற்கு சராசரியாக 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் பேர் வரை இறப்பதாகவும் அதற்கான இறப்பு சான்றிதழ்களை மாநகராட்சி வழங்கி வருவதகாவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் 31 ஆயிரத்து 237 பேர் உயிரிழந்திருப்பதாக மாநகராட்சி கூறுகிறது. 2019ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதத்தில் 33 ஆயிரத்து 435 பேர் உயிரிழ்ந்திருப்பது மாநகராட்சி புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் கொரோனா பாதித்த இந்த ஆண்டில் இறப்பு விகிதம் கடந்த ஆண்டுகளை விட குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 5 ஆயிரத்து 779 பேரும், பிப்ரவரியில் 5 ஆயிரத்து 240 பேரும் மரணம் அடைந்த நிலையில் பொது முடக்கம் தொடங்கிய, மார்ச் மாதத்தில் 4 ஆயிரத்து 703 பேர் இறந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் 3 ஆயிரத்து 754 பேரும், மே மாதத்தில் 4 ஆயிரத்து 532 பேரும், ஜூன் மாதத்தில் 844 பேரும் என 24 ஆயிரத்து 852 பேர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் சென்னையில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் , பொதுமுடக்கம் காரணமாக விபத்து போன்றவை தவிர்க்கப்பட்டுள்ளதாகல் மரணம் அடைவோர் எண்ணிக்கை கடந்த 2ஆண்டுகளைவிட இந்த ஆண்டு சற்று குறைவாக இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.