தமிழ்நாடு

மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி

Veeramani

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்த நிலையில், அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல நடைபெறும். தேர்தலில் ஒருவேளை மாதவராவ் வெற்றிபெற்றிருந்தால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

முன்னதாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் மாதவராவ், இவருக்கு வயது 63. இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததிலிருந்தே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு பதிலாக பரப்புரையில் கூட அவரது மகள்தான் பணியாற்றினார். நுரையீரல் தொற்று காரணமாக மதுரை கேகேநகர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நேற்று இவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானது. ஐசியுவில் வெண்டிலேட்டரில் இருந்து சிகிச்சை பெற்று வந்த மாதவராவ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.