திவாகரன் பேட்டி pt desk
தமிழ்நாடு

”தனபால் முதல்வராக ஆவதற்கு பட்டியலின எம்எல்ஏ-க்களே எதிர்த்தனர்; திருமா ஆதரித்தார்” - திவாகரன் பேட்டி

webteam

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்... ”எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுத்த பிறகு தினகரனுடன் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண அப்போதைய சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று நான் சசிகலாவிடம் முன்மொழிந்தேன் அதை திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், அதற்கு அதிமுகவின் 38 பட்டியலின எம்எல்ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்” என்றார்.

EPS

மேலும், “வரும் 2026 தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடந்து விடும். அதிமுகவும், பாஜகவும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் வார்த்தை போரை தவிர்க்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு சரியாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக அரசு மிகவும் கவனம் செலுத்த வேண்டும். திமுக, மத்திய அரசோடு 24 மணி நேரமும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் நிதிகள் வருவதில்லை. மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக சமூகமான முறையை தமிழக அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எடப்பாடிக்கு அட்வைஸ் செய்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அவர் என்னை விட சீனியர். அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு தான் நடக்கும் எந்த அதிமுக தலைவரோ, நிர்வாகியோர் என்னிடம் தொடர்பில் இல்லை.

Thirumavalavan

ஒரு காலத்தில் தமிழக அரசியல் நன்றாக இருந்தது. காலத்தின் கட்டாயமா அல்லது கலியுகமா என்று தெரியவில்லை. தற்போது தமிழக அரசியலில் தனி மனித தரமற்ற விமர்சனங்கள் செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் அனைவரிடமும் சுமூகமாக இருக்க வேண்டும்” என்று திவாகர் கூறினார்.