ஏடிஜிபி சஞ்சய் குமார் pt desk
தமிழ்நாடு

"கம்போடியா நாட்டில் உருவாகும் சைபர் க்ரைம் குற்றவாளிகள்" - ஏடிஜிபி சஞ்சய் குமார் தகவல்

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

பூவிருந்தவல்லி அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், சைபர் க்ரைம் குற்றச் செயல்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் க்ரைம் தலைமையகம் சார்பில் நடைபெற்றது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தற்கால சைபர் மோசடி குறித்து தமிழ்நாடு சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர்...

Students

மக்கள் தொகை மிகுதியான நாட்டில் நாம் வசிக்கின்றோம். 140 கோடி மக்களில் 75 கோடி நபர்கள் இணையதள சேவையை வைத்திருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். ஆகையால், இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் சிக்கல்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, விபத்தில் சிக்காமல் தற்காத்துக் கொள்ள வேண்டியதைபோல, இணையதளத்தை பயன்படுத்தும்போதும் தற்காத்துக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்.

இந்தியாவில் 46 கோடி மக்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தங்களது புகைப்படத்தை பதிவிடுவதன் மூலம் சைபர் குற்றவாளிகள் அதனை எளிதாக பயன்படுத்த நேரிடுகிறது. ஆகையால் பாதுகாப்பாக சமூக வலைதளத்தை பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் 140 கோடி மக்களில் 112 கோடி மக்கள் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர்.

Police officers

இந்திய மக்கள் தொகையில், 48 சதவீத மக்கள் 34 வயதுக்கும் குறைவாக உள்ளனர். 43 சதவீத மக்கள் வேலையை எதிர்பார்த்து இருக்கின்றனர். அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையை நடத்த முடியாத சூழல் ஏற்படும். இத்தகைய சூழலில் அவர்களை கவர்ந்து சைபர் குற்றம் செய்ய பயன்படுத்துவார்கள். சைபர் குற்றம் மட்டுமின்றி பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள். வாழ்க்கையை நடத்த சமீபத்தில் கம்போடியா நாட்டிற்குச் சென்ற இந்தியர்கள், சைபர் தளத்தில் பணம் பறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதனை போலீசார் முறியடித்துள்ளனர்.

46 சதவீத சைபர் குற்றவாளிகள் கம்போடியா நாட்டில் உருவாகின்றனர். இந்திய அரசும் தெலங்கானா போலீசாரும் இதனை முறியடித்துள்ளனர். தமிழகத்தில் 54 சைபர் க்ரைம் காவல் நிலையம் உள்ளது. அனைத்து மாவட்டத்திலும், நகரத்திலும் சைபர் க்ரைம் காவல் நிலையம் உள்ளது. இந்தியாவிலேயே அதிக சைபர் க்ரைம் காவல் நிலையம் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியா 91... பாகிஸ்தான் 92... ஆகையால் தொலைபேசி எண்ணுக்கு முன்பு 92 என்று வந்தால் தேவை இல்லாமல் அழைப்பை ஏற்க வேண்டாம்.

cyber crime

கடந்த 50 ஆண்டுகளில் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துள்ளது. அதே வேகத்தில் தொழில் நுட்பத்துக்கான பாதுகாப்பு வளர்ந்துள்ளதா என்றால் இல்லை. ஆகையால் தான் பிரச்னைகள் உருவாகின்றது" என்று சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் பேசினார்.