தமிழ்நாடு

காதலர் தினத்தன்று நடந்த இதய தானம்: காதல்‌ தம்பதியரின்‌ உருக்கமான பின்னணி

webteam

நாடு முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காதல் மனைவியின் இதயத்தை தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் ராஜ். இவரது மனைவி கோகிலா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த கோகிலாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. கடந்த வாரம் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த கர்ப்பிணியான கோகிலாவுக்கு உடல்நிலை மோசமாகவே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

அறுவை சிகிச்சையில் கோகிலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் உடல்நிலை மோசமாக இருந்ததால் சிகிச்சை பலனில்லாமல் கோகிலா மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனைக் கேட்டு மன முடைந்த கோகிலாவின் கணவர் தன் மனைவியின் இதயத்தை தானமாக வழங்கியுள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு இத‌யம் தேவைப்பட, கோகிலாவின் இதயம் சென்னை கொண்டுவரப்பட்டு அந்த நபருக்கு பொருத்தப்பட்டது.

இது குறித்து பேசிய கோகிலாவின் கணவர், ''காதலர் தினத்தன்று என் காதல் மனைவி, அவள் இதயத்தை எனக்குத் தராமல் வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்'' என்று உருக்கமாக தெரிவித்தார்