மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் கஃபே pt desk
தமிழ்நாடு

கோவை: மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தொண்டு நிறுவனத்தால் திறக்கப்பட்டுள்ள swag கஃபே

சமூகத்தில் சமமான வாழ்க்கையை உறுதி செய்யும் வேலைவாய்ப்பை, மாற்றுத் திறனாளிகளுக்கு உருவாக்கும் முயற்சியாக தமிழகத்தில் முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் கஃபே கோவையில் திறக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஐஸ்வர்யா

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பல சவால்களை கடந்து பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த மணிகண்டனுக்கு, முதுநிலை படிக்க கோவை அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. பொருளாதார சிரமத்தினால் பகுதிநேர வேலை தேடிவந்த மணிகண்டனுக்கு, வாடகை, போக்குவரத்து என சொந்த செலவை சமாளிப்பதை விட தடையாக இருந்தது இவரது பிறவி பாதிப்பான பார்வை குறைபாடு.

மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் கஃபே

இருப்பினும், தன் முயற்சியை கைவிடாத மணிகண்டனுக்கு பலனாக கிடைத்ததுதான் கஃபே பணி. இப்போது சொந்த செலவை மட்டுமின்றி வீட்டிற்கும் சிறிதேனும் உதவும் விதமாக சம்பாதிக்க ஆரம்பித்த மகிழ்சியில் உள்ளார். இதற்கு காரணம் தமிழகத்தில் முதல் முறையாக தனியார் (ஸ்வர்கா) தொண்டு அமைப்பு சார்பில் திறக்கப்பட்டுள்ள கஃபே.

கல்லூரி மாணவர்களான மணிகண்டன், சிவகுமார்போல பார்வை குறைபாடு கொண்ட இல்லத்தரசி ஒருவர், ஆட்டிசம் குறைபாடு கொண்ட இருவர், முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என மொத்தம் 6 பேர் இந்த முன்மாதிரியான முயற்சிக்கு முன்னோடிகள்.

காபி, தேநீர் வகைகள், சிற்றுண்டிகள் கொடுப்பது, வாடிக்கையாளர்களை வரவேற்பது, சுத்தம் செய்வது, பில் கொடுப்பது என கஃபேயில் உள்ள அனைத்து வேலைகளுக்கும் இவர்களை தயார் செய்திருந்தாலும் அவரவர் திறமையாக செய்யக் கூடிய பணிகளை செய்யவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தன்னைப் போலவே மாற்றுத்திறனாளி மகனுக்காக ஏதேனும் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு இந்த கஃபே மூலம் அஜிதாவுக்கு நனவாகியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் கஃபே

கோவை மாநகர பகுதியான ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள பிரபலமான மாலில் 4-வது தளத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த swag கஃபே தற்போது trendsetter ஆக மாறி உள்ளது. சிவகுமார் போன்ற இளைஞர்கள் துவங்கி, இல்லத்தரசி அஜிதா, வயதானவர்கள் வரை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியாக திறன் மேம்பாட்டு பயிற்சியாக இந்த கஃபே திறக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் தொண்டு நிறுவனத்தின் (swarga foundation) நிறுவனர் ஸ்வர்ணலதா.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு முன்மாதிரி திட்டங்களை தேசிய அளவில் முதல் முறையாக கோவையில் தொடங்கி வரும் ஸ்வர்ணலதாவின் அடுத்த மாபெரும் புரட்சியாக மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் இந்த கஃபே பார்க்கப்படுகிறது.

வளமான வாழ்க்கைக்கான அடித்தளமாக உள்ள வேலைவாய்ப்பை மாற்றுத் திறனாளிகளுக்கும் உறுதி செய்ய வேண்டும் என்ற இலக்கிற்கு பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பு அடுத்தடுத்து பெரிய முயற்சிக்கு விதையாக அமையும் என்றார். தேசிய விருதாளர் ஸ்வர்ணலதா.