தமிழ்நாடு

நேரத்தை வீணாக்குவதா? டிடிவி-க்கு நீதிமன்றம் கண்டனம்

நேரத்தை வீணாக்குவதா? டிடிவி-க்கு நீதிமன்றம் கண்டனம்

webteam

அன்னி‌‌ய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் வழக்கு தொடுத்ததற்கு உச்சநீதிமன்றம் கண்‌டனம் தெரிவித்துள்ளது.

டி.டி.வி.தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கூறி உச்சநீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடுத்திருந்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து தினகரன் மீதான மற்றொரு வழக்கு விசாரணையின் போது அவர் மீதான அன்னிய செலாவணி வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்க‌ வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் எதிர்த்து டிடிவி.தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் குற்றச்சாட்டுகள் குறித்த போதுமான ஆதாரங்கள் கொடுக்கப்படாததால், அவசரகதியில் விசாரணை நடத்த கூடாது எனவும் தினகரன் தரப்பில் கூறப்பட்டிருந்தது. 

இந்த வ‌ழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தினகரனுக்கு கண்‌டனம் தெரிவித்தனர். வழக்கை மெதுவாக விசாரிக்க வேண்டும் என்பது வேடிக்கையாக உள்ளதாகவும் கூறினர். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் இது போன்ற மனுக்களை இனி தாக்கல் செய்தால் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். ‌அன்னிய செலாவணி மோசடி வழக்கில் மட்டும் தினகரன் 2 முறை உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பது நினைவுகூரத்தக்கது.