Car Fire accident pt desk
தமிழ்நாடு

பூந்தமல்லி: திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - நல்வாய்ப்பாக குழந்தையுடன் உயிர்தப்பிய தம்பதி!

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (26). இவரது மனைவி ஜெயா (21). இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், புஷ்பராஜ், தனது மனைவி ஜெயா மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு காட்டரம்பாக்கம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை நசரத்பேட்டை அருகே சென்ற போது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

Fire accident

இதையடுத்து காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு மூன்று பேரும் காரில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் கார் திடீரென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பூந்தமல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் தீப்பிடித்து எரிந்ததையடுத்து அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் தீயில் எரிந்த காரை போலீசார் அப்புறப்படுத்தினார். இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.