தமிழ்நாடு

தமிழகத்தில் இரண்டாம் நாளாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

JustinDurai

தமிழகத்தில் இரண்டாம் நாளாக இன்று காலை 10 மணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.

தமிழ்நாட்டில் முதல் நாளான நேற்று 2 ஆயிரத்து 945 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் 166 மையங்களில் தலா 100 பேர் வீதம் 16 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்த முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் மிகக் குறைந்த சதவீத அளவிலான மக்களே தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்திருந்தனர்.

சென்னையில் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி, கீழ்பாக்கம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 50 முதல் 60 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். அதேசமயம் பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள பலரும் தயக்கம் காட்டியதை காண முடிந்தது. பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தால் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மையங்களுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.