தமிழ்நாடு

கூரைவீட்டில் பற்றிய தீ : சமைத்துக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு

கூரைவீட்டில் பற்றிய தீ : சமைத்துக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு

webteam

மயிலாடுதுறையில் கூறைவீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண் உயிரிழந்தார். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கலம் ஊராட்சி கீழப்பட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுகுணாதேவி. இவரது கணவர் மதுசுதன் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டதால், தனது தந்தை முனுசாமி பராமரிப்பில் அவரது வீட்டுக்கு பக்கத்து கூரைவீட்டில் தனியே வசித்து வந்தார். இவரது இரண்டு குழந்தைகளும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு சுகுணாதேவி சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக கூறையில் பற்றிய தீ வீடு முழுவதும் பரவியது. சுகுணாதேவியின் உடையிலும் தீப்பிடித்தது. சத்தம் கேட்டுவந்த சுகுணாதேவியின் உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனால், தீயில் சிக்கிய சுகுணாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.