தமிழ்நாடு

கூலி தொழிலாளிக்கு 120 வயது : ஆதாரில் மீண்டும் சர்ச்சை !

webteam

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 45 வயது கூலி தொழிலாளி ஒருவருக்கு 120 வயது என ஆதார் அட்டையில் உள்ளதால் செய்வதறியாது திகைத்து வருகிறார். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 45 வயது கூலித் தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு ஆதார் அடையாள அட்டை எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த ஆதார் அட்டை வீட்டிற்கு வந்த நிலையில் அதை பார்காமல் பத்திரமாக வீட்டிலயே வைத்திருந்தார். இந்நிலையில் மகாலிங்கம் தற்போது வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். அதற்காக வீட்டு கடன் வாங்க வங்கியை நாடிய போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

கூலித் தொழிலாளி மகாலிங்கத்தின் ஆதார் அட்டையில் அவர் பிறந்த ஆண்டு 06.11.1900 என்று தவறுதலாக இருந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்  உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லாத நிலையில் செய்வதறியாது திகைத்து வருகின்றார். மேலும் இவருக்கு வயது 45 ஆகும் நிலையில் இவருக்கு 120 வயதை நெருங்கி இருப்பதாக தெரிவித்து வங்கி கடன் தரமுடியாது என வங்கி ஊழியர்கள் கூறியதும் வேதனை தெரிவித்துள்ளார்.  மேலும் இவருக்கு ஆதார் அட்டையில் திருத்தம் செய்து வங்கி கடன் தருமாறு அரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.