Thirunavukarasar pt desk
தமிழ்நாடு

“நான் எதையாவது பேசி அதிமுகவில் புது பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை” – திருநாவுக்கரசர்

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்...

‘2026-ல் திமுக வென்றால், நிச்சயம் அமைச்சரவையில் காங்கிரஸூக்கு இடம் வேண்டும் என்ற கோரிக்கை குறித்து...’ 

“மாநிலத்தில் திமுக பெரும்பான்மை கட்சி. தேசிய அளவில் காங்கிரஸ் பெரும்பான்மை கட்சி. காங்கிரஸ் திமுகவிற்கு இடையே கூட்டணி பகிர்வு நல்ல முறையில் உள்ளது. திமுக தனி மெஜாரிட்டி இல்லாத போது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது.

Thirunavukarasar

அமைச்சரவையில் இடம் என்பதை பொறுத்தவரை, எம்எல்ஏ எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டால்தான் அந்த பிரச்னை வரும். காங்கிரஸ் கட்சி 2026ல் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என பேசுவது குற்றமாகாது. இதையெல்லாம் சொல்லாமல் எப்படி கட்சியை வளர்க்க முடியும்? அதற்காக கட்டாயமாக அமைச்சரவையில் இடம் பெற்றே ஆக வேண்டும் என்றும் சொல்ல முடியாது, அவ்வாறு பேசுவதையும் தவறு என்றும் சொல்ல முடியாது.

கர்நாடகாவில் அமலுக்கு வந்த ‘கன்னட இட ஒதுக்கீடு மசோதா’ குறித்து...

இந்தியா முழுவதும் ஒரே நாடு. மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. அதிக இடம் கொடுக்க வேண்டும் என்பது மாநில அரசு விருப்பமாக இருக்கலாம். ஆனால், மாநில மக்களுக்கே 100 சதவீத வேலை வாய்ப்பு எனக் கூறுவது தவறு. பிறகு இந்தியா எப்படி ஒற்றுமையான நாடாக இருக்கும்? மற்ற மாநிலங்கள் மற்றும் மொழி பேசுகிற மக்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதும் சரியான கருத்தில்லை.

CM Stalin Rahul gandhi

இபிஎஸ் - ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி சர்ச்சை குறித்து...

அதிமுகவில் ஏற்கனவே பல பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே பல பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கும் போது நான் எதையாவது சொல்லி ஒரு புது பிரச்னை உருவாக்க விரும்பவில்லை. நான் காங்கிரஸ் கட்சியில், வேறு கூட்டணியில் உள்ள போது அதிமுகவையோ அல்லது சசிகலாவையோ விமர்சித்து பேச விரும்பவில்லை. நானே தேவையென்றால் பேசுவேன்.

காங்கிரஸ்-க்கும் திமுகவுக்கும் சண்டையா?

நானும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி உருவாக வேண்டும் என்று பேசியவன்தான். நான், தங்கபாலு, இளங்கோவன் என எல்லா தலைவர்களும் சொன்னதைதான் தற்போதைய தலைவர் செல்வப் பெருந்தகையும் பேசுகிறார். எனவே திமுகவுக்கும் செல்வப் பெருந்தகைக்கும் காங்கிரஸ்-க்கும் திமுகவுக்கும் சண்டை என்பது கிடையாது. திமுகவோடு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். ஸ்டாலின் தலைமையில் ராகுல் காந்தி தலைமையில் மாபெரும் வெற்றியை இந்த கூட்டணி பெற்றுள்ளது. ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்தான்.

2026-ல் அதிமுகவுடன் கூட்டணியா?

EPS

அதிமுகவுடன் கூட்டணியா என கேட்பதே தவறானது. அதேநேரம் மின் கட்டண உயர்வை மாநில அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடிக்கடி மின் கட்டண உயர்வு ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மக்களை வலிமைப்படுத்திய பிறகு மத்திய மாநில அரசுகள் கட்டணத்தை உயர்த்தலாம். ஏழை எளிய மக்களை பாதிக்கும் விதத்தில் மின் கட்டண உயர்வு இருக்கக் கூடாது. ஆகவே மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.