யுவன் சங்கர் ராஜா pt desk
தமிழ்நாடு

யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் - பின்னணி என்ன?

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் வசித்து வந்த வீட்டுக்கு ரூ.20 லட்சம் வாடகை செலுத்தாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்ய முயற்சிப்பதாக உரிமையாளர் தரப்பில் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியா 6வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு மியூசிகல் ஸ்டூடியோ நடந்தி வந்துள்ளார். இந்த வீடு துபாயில் இருக்கும் பசிலதுல் ஜமீலா என்பவருக்குச் சொந்தமானது. இவரது சார்பில் இவரது சகோதரர் முகமது ஜாவித் மற்றும் அஜ்மத் பேகம் இந்த புகாரை அளித்துள்ளனர். அதேபோல், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடமும் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா

அந்த புகாரில்,, கடந்த 2023 முதல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வாடகை வீட்டிற்கு ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளனர். வாடகையை கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர், ராஜா செல்போன் அழைப்பை எடுக்காமல் இருப்பதாகவும் தனது மேலாளர் மூலம் அலட்சியமான காரணத்தை தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. வாடகை ஒப்பந்தத்தை மீறி யுவன் சங்கர் ராஜா செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் புகார் தொடர்பாக விசாரித்து யுவன் சங்கர் ராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணைை தொடங்கி உள்ளனர். தற்போது வரை யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. இந்த புகார் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.