தமிழ்நாடு

சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை ஊரிலிருந்து துரத்தும் அவலம்!

webteam

தூத்துக்குடியில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை ஊரை விட்டு வெளியேற நாள் குறித்த சம்பவம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னைக்காயல் கிராமத்தில் சில நாட்களுக்கு முன் தண்டோரா முழக்கமிட்டு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சாதியினரால் பரபரப்பட்ட அந்தத் தண்டோரா அறிவிப்பில், “கடந்த 15 ஆண்டுகளில் வேறு ஜாதியில் திருமணம் செய்தவர்கள் 20.02.2018 தேதிக்குள் வெளியேற வேண்டும். அவர்களுக்கு இந்த ஊரில் நடக்கும் நல்லது, கெட்டதுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை.

அவ்வாறு வெளியேற மறுத்தால் அவர்கள் ஊர்மக்களால் வெளியேற்றப்படுவார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே தற்போது பல குடும்பத்தினரை வெளியேற்ற முயற்சிகள் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.