தமிழ்நாடு

கை கழுவியபோது விபரீதம் - நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்

கை கழுவியபோது விபரீதம் - நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்

Sinekadhara

செம்மஞ்சேரியில் நீச்சல் தெரியாததால் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் 2 பேர் குளத்தில் மூழ்கி கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாரதி ராஜா, இவரது மகன் அருண் குமார். செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காரத்திக்கேயன், இவரது மகன் நித்திஷ் குமார். அருண் குமார், நித்திஷ் குமார் இருவரும் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இருவரும் நண்பர்களுடன் செம்மஞ்சேரிக்கு சென்றனர். அப்போது, ராஜீவ்காந்தி சாலை பகுதியில் உள்ள குளத்தின் அருகே உணவு அருந்திவிட்டு கை கழுவுவதற்காக குளத்தில் உள்ள படியில் இறங்காமல், சரிவில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருண்குமார் குளத்தில் விழுந்திருக்கிறார். அவரை காப்பாற்ற நித்திஷ்குமார் முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் இருவரும் குளத்திற்குள் விழுந்திருக்கின்றனர். நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் நண்பர்களின் கண்ணெதிரே நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.