தமிழ்நாடு

கல்லூரி மாணவர் தலையை துண்டித்து கொலை : 6 பேருக்கு வலைவீச்சு

webteam

ஆத்தூர் அருகே கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சத்தியமூர்த்தி (20). தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இவரும் இவரது நண்பர்களும் கீழ கீரணூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் இளநீர் திருடியுள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சத்தியமூர்த்தி உட்பட மூவரை பிடித்து கட்டிவைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். ஆனால் சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி சாதி பெயரைக் கூறி அவதூறாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 6பேர் கொண்ட கும்பல் சத்தியமூர்த்தியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, தலையை துண்டித்து எடுத்துள்ளனர். இது தொடர்பாக கீழ கீரணூர் கிராமத்தைச் சேர்ந்த 6பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே துண்டிக்கப்பட்ட தலை கீரணூர் அருகே காட்டுப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. முன்னதாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர் கொலை எதிரொலியாக அந்த கிராமங்களில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் பார்வையிட்டார். கொலை செய்யப்பட்ட மாணவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.