தமிழ்நாடு

கோவை: லாரியை முந்த முயன்ற போது விபரீதம்! டயரில் சிக்கி பைக்கில் வந்த இளைஞர் பலி!

webteam

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தனக்கு முன்னால் சென்ற லாரியின் பின் சக்கிரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி சந்தை மைதானத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் 28 வயதான மனோஜ். இவர் இன்று தனது வீட்டில் இருந்து கிளம்பி தான் பணிபுரியும் சந்தை மைதானம் பகுதிக்கு செல்ல தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் காந்தி சிலையருகே முன்னால் சென்ற லாரியை இடது புறமாக சென்று கடந்து செல்ல முயன்ற போது மற்றோரு இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி ஓடி கொண்டிருந்த லாரியின் அடியில் சாய்ந்து விட்டார்.

இதில் கண் இமைக்கும் நேரத்தில் லாரின் பின் சக்கரம் அவர் மீது ஏறி கடந்து சென்றது. இக்கோர விபத்தில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஒரு சில வினாடிகளில் நடைபெற்ற இவ்விபத்து காட்சி அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இவ்விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.