CM stalin pt desk
தமிழ்நாடு

விமான நிலையத்திற்கு வழியனுப்ப வந்த முன்னாள் அமைச்சர் நாசர்.. தட்டிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

webteam

தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று புறப்பட்டு சென்றுள்ளார்.

CM stalin

சிங்கப்பூரில் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்திக்கும் முதலமைச்சர், அங்கு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதோடு, கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

தொடர்ந்து மே 26 ஆம் தேதி ஜப்பான் நாட்டுக்குச் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதோடு, தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார்.

CM Stalin

முன்னதாக சிங்கப்பூர் செல்ல விமான நிலையம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் புத்தகம் கொடுத்து, வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவரிடம் பேசி, அவரின் தோலில் தட்டி வாழ்த்தி அனுப்பினார்.

cm stalin

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதன் முக்கிய நோக்கமே உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கத்தான் எனவும், இந்த பயணத்தில் பல நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாகவும், பயணம் வெற்றிகரமாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் கடந்த ஜூலை 2021 முதல் தற்போது வரை, 226 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 2 லட்சத்து 95 அயிரத்து 339 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதன் மூலம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், முதலமைச்சரின் தனி செயலாளர் தினேஷ் உள்ளிட்டோர் சென்றனர். ஏற்கனவே தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், மற்றும் சில துறைகளின் செயலாளர்கள் முன்கூட்டியே சிங்கப்பூருக்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.