தமிழ்நாடு

பிரதமரிடம் 4, 5 முறை நீட் வேண்டாம் என வலியுறுத்தினேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinekadhara

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போது நீட் தேர்வு வேண்டாம் என 4,5 முறை வலியுறுத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு நடைபெறுமா, இல்லையா என தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் குளப்பத்தில் உள்ளார்கள் என்றும் கூறினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போது நீட் தேர்வு வேண்டாம் என 4,5 முறை வலியுறுத்தினேன். 2010ல் விரும்புகின்ற மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற நிலைமை இருந்தது. தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் நீட் கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடுவோம்; வெற்றி பெறுவோம். அதிமுகவும் துணை நிற்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்” என்றார்.

இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நிச்சயம் துணைநிற்கும் என்று உறுதி அளித்தார்.

இதனிடையே, “காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போதுதான் நீட் வந்தது என்பது உண்மைதான். ஆனால், அது தமிழகத்தில் வரவில்லை. ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு நடைபெறவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகுதான் நீட் தமிழத்திற்கு வந்தது” என்றார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.