தமிழ்நாடு

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடக்கம் : முதல்வர் அடிக்கல் நாட்டினார்

webteam

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ‌பயன்பாட்டிற்கு வரும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மழைக்காலங்களில் பவானி ஆற்றில் அதிகப்படியான நீர் உபரியாக வீணாகிறது. இதைக்கொண்டு திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் ஏரி, குளம் ஆகியவற்றை தண்ணீரால் நிரப்பும் திட்டமாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இத்திட்டம் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் அரசாணையில் வெளியிடப்பட்டது. இதன்மூலம் 30 பொதுப்பணித்துறை குளங்கள், 41 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 700க்கும் மேற்பட்ட நீர் தேக்கங்களுக்கு தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியபோது, மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையான இன்னும் இரண்டு ஆண்டுகளில் ‌பயன்பாட்டிற்கு வரும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் பவானி ஆற்றில் இருந்து வரும் உபரி நீர், ஏரி, குளங்களில் நிரப்ப வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். கேரள மாநில அரசுடன் ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.