தமிழ்நாடு

சுவர் இடிந்து இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

webteam

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து இறந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடன் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “நேற்றைய தினம் 18 செண்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. அதன் காரணமாக நடூர் பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் மீது அருகாமையில் இருந்து மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் 17 பேர் இறந்தனர். தகவல் கிடைத்ததும் மீட்புப் பணியினர் விரைந்து செயல்பட்டனர். 

சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். 17 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனையானது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6 லட்சமும் என மொத்தம் பத்து லட்சம் வழங்கப்படும். அத்துடன் அவர்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். 

இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒருவருக்கு வேலை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும். அந்தப் பகுதியில் இன்னும் பல ஓட்டு வீடுகள் இருப்பதை கண்டோம். அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்படும். ஏற்கனவே பாதுகாப்பு இல்லாத சூழலில் வசிப்போருக்கு அரசு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படும். இந்த விவாகரத்தில் ஸ்டாலின் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்” என்று கூறினார்.