பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் முகநூல்
தமிழ்நாடு

‘பாடும் நிலா’வின் பெயரில் புதிய சாலை... பாடகர் எஸ்.பி.பியை கௌரவப்படுத்திய தமிழ்நாடு அரசு!

PT WEB

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையிலும், அவரது புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர், முதல் தெருவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயரிடப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தன் பதிவில் முதல்வர், “பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்” என்றுகூறி நெகிழ்ந்துளார்.

இதற்கு எஸ்.பி.பியின் மகன் சரண் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் குடும்பத்தின் சார்பில் அரசுக்கு வைத்த கோரிக்கையை இரண்டு நாட்களில் நிறைவேற்றி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் மற்றும் சாமிநாதன் ஆகியோருக்கும் சரண் நன்றி தெரிவித்துள்ளார்.