தமிழ்நாடு

’போதிய தடுப்பூசிகளை வழங்குக’ - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Sinekadhara

தமிழக மக்கள்தொகை மற்றும் கொரோனா பாதிப்பின் தன்மைக்கேற்ப கூடுதல் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் எழுதிய கடிதத்தில், ஏற்கெனவே தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் முடிந்துவிட்டதால், போதிய தடுப்பூசிகளை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் முயற்சியால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாடு பெருமளவு உயர்ந்துள்ளது. மத்திய அரசிடமிருந்து போதிய தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாததால் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகள் வழங்கவும், செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை தேவை எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழக மக்கள்தொகை மற்றும் கொரோனா பாதிப்பின் தன்மைக்கேற்ப கூடுதல் தடுப்பூசிகளை விரைந்து வழங்கவேண்டும் எனவும், மத்திய அரசு மூலமும், பிறவழிகளிலும் தலா ரூ.50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவேண்டும் எனவும் முதல்வர் எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.