முக ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

“எனக்கு உடல்நலம் சரியில்லையா?” - பத்திரிகை செய்தியும் முதல்வரின் பதிலும்...!

Angeshwar G

அயலகத் தமிழர் மாநாட்டில் கணியன் பூங்குன்றன் பெயரில் 13 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “எனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் உற்சாகம் இல்லை என்றும் என்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதைப்பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்கு என்ன குறை? தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக உள்ளபோது அதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு?

நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். சென்னையைச் சேர்ந்த சகோதரி ஒருவர் பேசினார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.1000 வந்தது. பொங்கல் பரிசாக ரூ.1000 வந்துவிட்டது. அரிசி சர்க்கரை வந்துவிட்டது. வெள்ள நிவாரணமாக ரூ.6000 கிடைத்துவிட்டது. ஒரு மாதத்தில் முதலமைச்சரே ரூ.8000 ஆயிரம் கொடுத்துவிட்டார். பொங்கலுக்கு யாரையும் நான் எதிர்பார்க்க தேவையில்லை என பேட்டி கொடுத்துள்ளார் அந்த சகோதரி.

அண்மையில் இதே அரங்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என சொன்னார்கள். இன்று நடைபெறுவதோ உலகத்தை வளப்படுத்த தமிழர்கள் சென்ற மாநாடு. இந்த மாநாட்டிற்கான மாபெரும் சிறப்பு சிங்கப்பூர் உள்துறை மட்டும் சட்ட அமைச்சர் சண்முகம் இங்கு வருகை தந்திருப்பது. அவர் உலகப்புகழ் பெற்ற தமிழர் அல்ல. உலகமே கவனிக்கும் பதவியில் இருக்கும் தமிழர்.

இப்போது அமைந்திருக்ககூடிய அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, அயலகத் தமிழர் நலனுக்காக தனி துறை உருவாக்கி தனி அமைச்சரையும் நியமித்து அவசரத் தேவைகள் உடன்க்குடன் சிறப்பாக தீர்த்துவைக்கப்பட்டு வருகிறது. ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மீது ஆர்வத்தை உருவாக்கி தமிழிணைய கல்விக்கழகம் மூலம் கல்வி கற்றுத்தரப்படுகிறது. வெளிநாடுகளில் கைது செய்யப்படும் தமிழர்களுக்கும் உரிய சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ இயலாமை போன்ற பல்வேறு காரணங்களால் தாயகம் திரும்ப முடியாமல் கஷ்டப்படும் தமிழர்கள், அவர்களை தாய்நாட்டிற்கு அழைத்துக் கொண்டுவரவும்... அங்கு இறக்க நேரிடும் தமிழர்களின் உடலை இந்தியா கொண்டு வரவும்... தமிழ்நாடு அரசால் ஒருகோடி ரூபாய் நிதி ஏற்படுத்தப்பட்டு தமிழர்களின் துயரங்களை துடைக்கும் பணி உரிய முறையில் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.