தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மின்வாரிய பணியாளர்: உயிருடன் மீட்ட பொதுமக்கள்!

kaleelrahman

மின்கம்பத்தில் ஏறி பணி செய்த மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய ஒப்பந்த பணியாளரை துரிதமாக செயல்பட்டு பொதுமக்கள் உயிருடன் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கடத்தூர் நடுத்தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் கோவிந்தசாமி (30). இவர், தாராபுரம் புறவழிச்சாலை அருகேயுள்ள காந்திபுரம் நகர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் நேற்று மாலை காந்திபுரம் பகுதியில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு அதே பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது ஏறி புதிதாக அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் லைன் மேனாக வேலைபார்த்து வரும் மயில்சாமி என்பவர் பணி நடைபெறுவது தெரியாமல் தெரு விளக்கு பவர் சப்ளை கொடுத்தபோது காந்திபுரம் பகுதியில் கம்பத்தின் மேல் இருந்த கோவிந்தசாமி உடலில் மின்சாரம் பாய்ந்து தலைகீழாக தொங்கியபடி சத்தம் போட்டுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்த பொதுமக்கள் மின்கம்பத்தில் ஏறி உயிருக்கு போராடியபடி தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த கோவிந்தசாமியை மீட்டனர்.

பின்னர் கோவிந்தசாமியை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து ஆய்வு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.