தமிழ்நாடு

ராமேஸ்வரம் வந்த சீனப் பெண்.. உடனடியாக சென்னைக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள்..!

webteam

சீனாவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ஆன்மிகப் பயணம் வந்த பெண் ஒருவர் கொரோனா பரிசோதனைக்காக நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை சீனாவில் மட்டும் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 30 நாடுகளில் 500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளும், சீனாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்கியுள்ளன. இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையதளம் மூலம் விசா தரும் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

 இதனிடைய சீனாவை சேர்ந்த ஜியாஞ்சுன் (48) என்ற பெண் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி அன்று கொல்கத்தா வந்துள்ளார். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு நேற்று இரவு ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். ராமநாதசுவாமி கோயில் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய ஜியாஞ்சுன் குறித்து தனியார் விடுதி நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

 இதனையடுத்து சீன பயணியை சுகாதார அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பின்னர் அடுத்தகட்ட பரிசோதனைக்காக ராமேஸ்வரத்தில் இருந்து தனி வாகனம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சீனப்பயணிக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.