தமிழ்நாடு

கதவை பூட்டி அறைக்குள் மாட்டிக் கொண்ட குழந்தை: போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

kaleelrahman

திண்டுக்கல்லில் அறையின் கதவை பூட்டிக்கொண்ட குழந்தையை அரை மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் விவேகானந்தாநகர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருபவர் முகமது அசாருதீன் - இர்பான பர்வீன் தம்பதியினர். இவர்களுக்கு 1.5 வயதில் அஸ்ஹாஸ் இஜ்யான் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், இன்று 19.10.21 மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வீட்டின் உள்ளே சென்று மெயின் கதவை சாத்தியுள்ளது. இதனால் கதவு லாக்காகி விட்டது.

இதையடுத்து குழந்தையைக் காணாமல் பரிதவித்த அம்மாவும் பாட்டியும் கதவை திறந்துள்ளனர். ஆனால் திறக்க முடியவில்லை. இந்நிலையில், வீட்டின் உள்ளே மாட்டிக் கொண்ட குழந்தை அழுக ஆரம்பித்தது முயற்சி செய்தும் இவர்களால் கதவை திறக்க முடியாத நிலையில், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 30 நிமிட போராட்டத்திற்குப் பின் ஹைட்ராலிக் டோர் ஓபனர் மூலமாக கதவை திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையைப் பார்த்ததும் அம்மாவும் பாட்டியும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.