தமிழ்நாடு

ரத்த வாந்தி எடுத்து இறந்த ஒருமாத குழந்தை - அரசு மருத்துவமனை மீது புகார்

webteam

முறையான கிகிச்சை அளிக்காததால் ஒரு மாதக் குழந்தை இறந்துவிட்டதாக கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்-சுவிதா தம்பதி. இவர்களுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அதற்குத் தேவையான மருந்துகள் அரசு மருத்துவமனையில் கையிருப்பு இல்லாததால், வெளியில் இருந்து வாங்கிவரக் கூறியதாக சொல்லப்படுகிறது.

ராஜேஷ் மருந்துகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார். குழந்தைக்கு மருந்து கொடுக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்து குழந்தை நன்றாக உள்ளதாக கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீட்டிற்கு சென்றவுடன் குழந்தைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் குழந்தை ரத்த வாந்தி எடுத்து மயங்கியுள்ளது. மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து  சிகிச்சையளிக்காமல்  தவறான சிகிச்சை அளித்ததாலேயே குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் குழந்தை இறந்ததற்கு மருத்துவரே காரணம் எனக்கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து மயிலாடுதுறை எம்எல்ஏ மற்றும் டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.