ரஜினி - ஸ்டாலின் PT
தமிழ்நாடு

திமுக மூத்த தலைவர்கள்,கலைஞர் குறித்து.. ரஜினியின் ’வாவ்’ பேச்சால் குலுங்கி குலுங்கி சிரித்த அரங்கம்!

Rishan Vengai

திமுக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதன் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், பத்திரிக்கையாளர் என்.ராம் உள்ளிட்ட பலபேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கலைஞர் எனும் தாய்

விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினி காந்த், கலைஞர் எதிர்கொண்ட அரசியல் சவால்கள் குறித்து பெருமையாக பேசினார். உடன் அரசியல் பேசும்போது ஜாக்கிரதையாக பேசவேண்டும் என்றும் பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் வயதில் மூத்தவரான ரஜினியின் அறிவுரையை ஏற்பதாக தெரிவித்தார்.

அரசியல் பேசும்போது ஜாக்கிரதையாக பேசவேண்டும்!

புத்தகத்தை பெற்றுக்கொண்ட பிறகு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “உலகில் எந்த அரசியல் தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடியதில்லை. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கருணாநிதியை பாராட்டி பேசியிருக்கும் பின்னணியில் மேலிடத்தின் உத்தரவு இருக்கும். சமூகம் மற்றும் மக்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி பாடுபட்டவர். கலைஞர் கருணாநிதிக்கு வந்த சோதனைகள் வேறு யாருக்கேனும் வந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள்.

கருணாநிதி பல சோதனைகள், விமர்சனங்களை கடந்து கட்சியை வளர்த்துள்ளார். 5 ஆண்டுகள் ஆட்சியில் இல்லையென்றாலே சிலர் திண்டாடுகின்றனர். அறிவார்ந்தோரின் சபையில் பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம், அரசியல் பேசினால் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும்” என்று புகழ்ந்து பேசினார்.

ரஜினியின் அறிவுரைக்கு பதில் சொன்ன முதல்வர்!

ரஜினி பேசியதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வயதில் மூத்தவரான ரஜினியின் அறிவுரையை ஏற்பதாக தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “என்னை விட ஒரு வயது பெரியவரான ரஜினியின் அறிவுரையை ஏற்று கொள்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட வேண்டாம். அனைத்திலும் நான் உஷாராகவே இருப்பேன்” என்று பேசினார்.