Tragic decision pt desk
தமிழ்நாடு

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் - கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (33). எல்ஐசி ஏஜெண்டாக பணிபுரிந்து வந்த வினோத், டிரேடிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதில், தொடர் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து பெரும் கடன் பிரச்னையில் வினோத் சிக்கியுள்ளார்.

online trade

இதனை அடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்களை விற்று சில கடனை அடைத்துள்ளார். எனினும் எஞ்சிய சில கடன் பிரச்னையால் நாள்தோறும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார், வினோத்தின் உடலை கைபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என முதலீடு செய்து நஷ்டம் அடைந்த நிலையில், கடன் தொல்லையில் சிக்கிய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.