இளைஞர் சாமுவேல்ராஜ் (23) புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை | ‘TNPL-ல் தேர்வாகவில்லை...’ - விபரீத முடிவெடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

இன்று காலை 10:10 மணியளவில் கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது 10:15 மணியளவில் நேஷனல் பள்ளி அருகே மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திய அந்த இளைஞர், திடீரென மேலே இருந்து கீழே குதித்துள்ளார்.

விபரீத முடிவெடுத்த பிரபல தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த இளைஞர் குறித்து வாகன ஓட்டிகள் போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் சோதனை செய்து பார்த்ததில் அந்த இளைஞர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சடலத்தை மீட்ட மவுண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்த அந்த இளைஞர் விருகம்பாக்கம், கிருஷ்ணா நகர் 6-வது பிரதான சாலை பகுதி சேர்ந்த சாமுவேல்ராஜ் (23) என்பது தெரியவந்தது.

இளைஞர் சாமுவேல்ராஜ் (23)

இதனை எடுத்து மவுண்ட் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் தெரியவந்தவை:

தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக தன்னை தயார்படுத்தி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்.

இவர் கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் (TNPL) போட்டியில் தேர்வாவதற்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். ஆனால், இரண்டு ஆண்டுகளும் தேர்வாகாததால் மன வருத்தத்தில் இன்று கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இவர் சில மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்திருக்கிறார். அப்படி இன்று காலை ராமாபுரத்தில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்துவிட்டு வீடு திரும்பும் போது மன உளைச்சலில் கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழ்நாடு அளவில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பாக ஆடியுள்ளார். இவரது தந்தை யுவராஜ் சினிமா துறையில் மேனேஜிங் டைரக்டராக இருந்து வருகிறார்

தற்போது உடற்கூராய்வுக்காக இவரது உடல் குரோம்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறிப்பு மவுண்ட் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.