Police station pt desk
தமிழ்நாடு

சென்னை: வயதை காரணம் காட்டி திருமணம் செய்து வைக்க மறுப்பு - இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

தாம்பரம் அருகே 17 வயது சிறுவனை தனக்கு திருமணம் செய்துவைக்க கோரிய 24 வயது பெண்... சிறுவனின் பெற்றோர் ஒப்புக்கொள்ளாததால் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு விபரீத முடிவெடுத்த பெண்

webteam

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம், 5வது தெருவில் வசித்து வருபவர் குளோரி அனிஷ் (24) என்ற பெண். பெங்களூரைச் சேர்ந்த இவர், சென்னையின் பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே கடையில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவனை இந்த பெண் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

விபரீத முடிவு எடுத்த இளம் பெண் குளோரி அனிஷ்

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சம்பவ இடத்தில் வாடகைக்கு இருவரும் குடியேறி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான செஞ்சிக்கு சென்ற சிறுவன், திரும்பி வராததால் குளோரி அவரது ஊருக்கு சென்று தனக்கு அச்சிறுவனை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அங்கே, சிறுவனின் வயதை காரணம் காட்டி அவரது பெற்றோர் திருமணத்துக்கு மறுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குளோரி, அங்கிருந்து சமூக வலைதளம் மூலம், ‘அவன் இல்லாத வாழ்க்கை தேவையில்லை’ எனக் கூறி தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ பதிவு செய்து விட்டு, விபரீத முடிவெடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.