Arrested pt desk
தமிழ்நாடு

விளையாட்டு வினையானது: கேலி செய்த ஆண் நண்பர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் கெனால் சாலையை சேர்ந்தவர் பிரேம் குமார் (30). இவர் பிரபல நட்சத்திர விடுதியில் நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அதே சாலையில் மஹா என்ற 23 வயது இளம்பெண் டீக்கடை நடத்தி வருகிறார். பிரேம் குமார் மற்றும் இளம்பெண் இருவரும் நண்பர்களாக இருந்து வரும் நிலையில், தினமும் டீக்கடையில் நின்று பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பிரேம் குமார் டீக்கடையில் நின்று இளம்பெண்ணை கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது விளையாட்டிற்கு இளம்பெண் மீது அங்கிருந்த கொதிக்கும் பாலை பிரேம்குமார் தெளித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கொதிக்கும் பாலை எடுத்து பிரேம்குமார் உடலில் ஊற்றியுள்ளார். அப்போது வலியில் துடித்த பிரேம்குமார், இளம்பெண்ணின் கையை முறுக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருகிலிருந்த நபர்கள் உடனடியாக பிரேம்குமார் மற்றும் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளம்பெண்ணிற்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ள நிலையில் இது போன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.