Tragic decision pt desk
தமிழ்நாடு

சென்னை: மனைவி பிரிந்து சென்ற விரக்தி - குழந்தையை கொன்று விட்டு கணவர் எடுத்த விபரீத முடிவு

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்க்குப்பம் வாணியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மோகன் (32) பரிமளா (28). தம்பதியர். இவர்களுக்கு நட்சத்திரா (5) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து மோகனும், அவரது குழந்தையும் வெளியே வராதால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இருவரும் சடலமாக இருந்தது தெரியவந்தது.

Police station

இதையடுத்து இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மோகனின் மனைவி பரிமளா தனது மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உறவினர் ஒருவருடன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மோகன் மனைவி இருக்கும் இடத்திற்குச் சென்று அவருடன் சண்டை போட்டு மகளை அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து மன உளைச்சலில் இருந்த மோகன், குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.