தமிழ்நாடு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு நெகட்டிவ் என வந்த ரிசல்ட்

kaleelrahman

சென்னை கண்ணகி நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவித்த பிறகு இறந்த நபருக்கு கொரோனா நெகட்டிவ் என குறுச்செய்தி வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (35). இவருடைய மனைவி உமா (33) மற்றும் இரண்டு மகன்களோடு கண்ணகி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், உமாவிற்கு லேசான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் உமா கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

பின்னர் சென்னை மாகராட்சி பணியாளர்கள் உமாவின் வீட்டிற்கு வந்து கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக கூறி அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் சென்னை மாநகராட்சி சார்பில் உமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உமாவின் செல்போனுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியால் தங்களுடைய மாதிரியை கோவிட் 19 பரிசோதனை செய்ததில் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக குறுச்செய்தி வந்தை கண்ட கணவர் பரமேஷ்வரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து பரமேஷ்வரன் சென்னை மாநகராட்சி உதவி எண்ணை தொடர்பு கொண்டபோது தவறுதலாக குறுஞ்செய்தி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சென்னை மாநகராட்சியில் இருந்து இருவேறு செய்திகள் வந்து தங்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதால் தன் மனைவி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தான் இறந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இதற்கு சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துமனை இரண்டும் விளக்கம் அளிக்க வேண்டும் என பரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.