தமிழ்நாடு

"இன்னும் கொஞ்ச வருஷத்துல காசு இருக்கிறவன் கையிலதான் தண்ணீர் இருக்கும்" பேஸ்புக்கில் ஒரு வேதனைப் பதிவு

webteam

சென்னையில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு மிகமோசமான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது. நமக்கு உடனடியாக ஒரு பெருமழை தேவை. மழைக்காக நாம் வானத்தை பார்க்கும் நேரத்தை விட, தெரு முனையில் தண்ணீர் லாரி வராதா என பார்க்கும் நேரம் அதிகரித்துவிட்டது.  அந்த வேதனையை பேஸ்புக் பக்கத்தில் கலீலுர் ரஹ்மான் என்பவர் பதிவிட்டுள்ளார்.

அதில் "சென்னையில நான் இருக்கும் அபார்ட்மெண்ட்டில், மெட்ரோ தண்ணியை விலைக்கு வாங்கி குடிநீர் தொட்டியில் நிரப்பிதான் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு குடியிருப்புவாசிகளும் தண்ணீர் செலவு பண்ற அளவுக்கு மாதா மாதம் பணம் கட்டிட வேண்டும். சென்னையில பல இடங்களில் இதான் நிலை. 

போன வாரத்துல திடீர்னு ஒரு நாள் தண்ணீர் வரவில்லை. மெட்ரோ தண்ணீர் லாரிக்கு செம்ம டிமாண்ட், அதனால, தண்ணீர் கொண்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கடுத்த நாளும் தண்ணீர் வரவில்லை. அந்த ரெண்டு நாளும் தண்ணியே இல்லாம செத்தே போயிட்டோம். நான் அலுவலகத்துக்கு போகாம 2 நாள் லீவு போட்டுட்டேன். மூன்று பக்கெட் தண்ணியை வெச்சு, ரெண்டு நாள் ரொம்ப கஷ்டப்பட்டு சமாளிச்சோம். வீட்டுல குழந்தைங்க, வயசானவங்க யாரும் இல்லாததால ஓரளவு தப்பிச்சோம். எனக்கு எதிர்த்தாப்ல இருக்குற குடியிருப்புல எல்லாம், ஏழு பேச்சிலர்ஸ் இருக்காங்க. அவங்க நிலைமை எல்லாம் ரொம்ப மோசம். 

இப்போ, இந்த வாரத்துல இருந்து மெட்ரோ தண்ணீர் லாரி சுத்தமா வர்றது இல்ல. தனியார் தண்ணீர் லாரிதான் வருது. இந்த தண்ணீர், மத்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிறது. வழக்கமா தண்ணீருக்கு குடுக்குற விலையை விட, இது 3 மடங்கு அதிகம். இந்த செய்தியை டிவியில பார்த்தப்போ கூட, பெருசா கண்டுக்கல. ஆனா, நிஜத்துல பார்க்குறப்போ ரொம்ப பயமா இருக்கு. இன்னும் 5 வருஷம் கழிச்சு, 10 வருஷம் கழிச்சு தண்ணீர் பஞ்சம் எவ்ளோ மோசமா இருக்குமோன்னு நினைச்சாலே பதறுது.

நம்ம எல்லோரோட அலட்சியமும், அடுத்த தலைமுறைக்கு எவ்ளோ பெரிய நரகத்தை குடுக்கப் போகுதுன்னு, அவங்களை நினைச்சு பார்த்தா பாவமா இருக்கு. இதுபோக, ஓரளவுக்கு சம்பாதிக்குற நாமளே இவ்ளோ கஷ்டப்படுறோம்னா, இல்லாத மக்கள் எல்லாம் தண்ணிக்கு எங்கே போவாங்கன்னு கொஞ்சம் நினைச்சு பாருங்க. மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத்தான் வருமான்னு தெரியல; ஆனா, இன்னும் கொஞ்சம் வருஷத்துல, காசு இருக்கறவன் கையில மட்டுந்தான் தண்ணி இருக்கும்.

ஏதாவது தப்பித்தவறி ஒரு கோடைமழை பெஞ்சுடாதா... தண்ணீர் பஞ்சம் கொஞ்சமாச்சும் குறைஞ்சுடாதான்னு ஏங்கி தவிக்குறப்போ, போன வாரம் ஒருவர் பேஸ்புக்குல ஐபிஎல் மேட்ச் நின்னுடக்கூடாது, சென்னையில மழை பெஞ்சுடக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருந்தாங்க !

- கலீலுர் ரஹ்மான்