இரவில் மின்வெட்டு - மக்கள் ஆர்ப்பாட்டம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை: இரவு நேரத்தில் விட்டு விட்டு வரும் மின்சாரம் - மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை அயப்பாக்கம் அருகே அயப்பாக்கம் - திருவேற்காடு சாலையில் உள்ள ஆவடி மாநகராட்சி எம்ஜிஆர் நகர், அபர்ணா நகரில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் விட்டு விட்டு மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் உச்சகட்டமாக நேற்ற இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அயப்பாக்கம் திருவேற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்வெட்டை கண்டித்து அயப்பாக்கம் திருவேற்காடு சாலையில் மக்கள் சாலை மறியல்

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி, திருவேற்காடு, திருமுல்லைவாயில் காவல் துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், மின்வாரிய அதிகாரிகள் யாரும் தொலைபேசி அழைப்புகளையும் மற்றும் பொது மக்களையும் நேரில் சந்திக்க வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் துறையினர் எச்சரிக்கையையும் மீறி சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே ஆவடி மாமன்ற உறுப்பினர் கார்த்திக் நேரில் பொதுமக்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தார் .

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்... “கடந்த சில தினங்களாகவே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் கடும் அவதியடைகிறோம். இன்றும் மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

மின்வெட்டை கண்டித்து அயப்பாக்கம் திருவேற்காடு சாலையில் மக்கள் சாலை மறியல்

மின்வெட்டு ஏற்படுவதால் சிறுவர் முதல் முதியவர் வரை கடுமையாக அவதியடைகிறார்கள். வேலைக்கு சென்று வீடு திரும்பவோர் நிம்மதியாக ஓய்வெடுக்க கூட முடியாத சூழல் ஏற்படுகிறது” என வேதனை தெரிவித்தனர். இத்தகைய சூழலில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.