மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் PT Web
தமிழ்நாடு

சென்னை: மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதமா? காவல்துறை மறுப்பு!

சென்னையில் மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜெ.அன்பரசன்

சென்னையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக பொதுமக்கள் பலர் நேற்று தங்களது வாகனங்களை வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களிலுள்ள மேம்பாலங்களில் பார்க்கிங் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மேம்பாலங்களில் பார்க்கிங் செய்யப்பட்ட வாகனத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருவதாக சமூக வலைதளங்களில் நேற்று வீடியோக்களுடன் கூடிய செய்திகள் வைரலாகின.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து போக்குவரத்து காவல்துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கப்படுவதாக பரவும் செய்தி, வதந்தி மட்டுமே. அப்படி எதுவும் வசூலிக்கப்படவில்லை. அதேநேரம் கனமழை எச்சரிக்கை காரணமாக போக்குவரத்து காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக மழை காலங்களில் மக்கள் வாகனங்களை பாதுகாப்பாக பார்க்கிங் செய்வதற்காக அருகில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காவல்துறை மறுப்பு அறிக்கை

பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவகின்றனர். போக்குவரத்து சம்பந்தமான உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தவகையில் சென்னை தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் 044 23452362 என்ற எண்ணிலும், வடக்கு மற்றும் மேற்கு பகுதி பொதுமக்கள் 044 23452330 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.