தமிழ்நாடு

நண்பர்களுக்குள் நடந்த தகராறில் கத்திக் குத்து - ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு

jagadeesh

சென்னை தரமணியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கி தங்க நகை, இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை பெருங்குடி, திருமலை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 10 ஆம் தேதியன்று இரவு தனது நண்பர்கள் அருண் மற்றும் கோபி ஆகியோருடன், பெருங்குடி, ஒய்.எம்.சி.ஏ. மைதானம் பின்புறம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.

அருண் மற்றும் கோபி ஆகியோர் சேர்ந்து மணிகண்டனைக் கத்தியால் தாக்கி, அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகை, யமஹா பைக், செல்போன் ஆகியவற்றைப் பறித்துத் தப்பிச் சென்றனர். காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக தரமணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தப்பிச் சென்ற குற்றவாளிகளில் பாலவாக்கத்தைச் சேர்ந்த அருண் என்பவரைக் கைது செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் மத்தியச் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளி கோபியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.