தமிழ்நாடு

சென்னை: வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை சூடுபடுத்திய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

kaleelrahman

தண்ணீரை சூடுபடுத்தியபோது வாட்டர் ஹீட்டரில் கை வைத்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை கோவிலம்பாக்கம், சத்யா நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்பவரின் மகன் ஷியாம் (15). இவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று குளிப்பதற்காக மின்சார வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடு செய்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் சூடாகி விட்டதா என தண்ணீரில் விரலை விட்டு பார்த்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கிக் கீழே விழுந்தார். இதை பார்த்த பெற்றோர் உடனடியாக சிறுவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவன் ஷியாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.