அருண் புதிய தலைமுறை
தமிழ்நாடு

”இனி ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரிகின்ற மொழியில் சொல்லி தருவோம்” - சென்னை புதிய காவல் ஆணையர் அருண்!

Jayashree A

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், காவல் பயிற்சி கல்லூரியின் DGP யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ADGP ஆக இருந்த அருண், சென்னை மாநகர காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற பின் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.

அதில், ”சென்னை எனக்கு புதிதல்ல.. இங்கு பல்வேறு பகுதிகளில் நான் பணியாற்றி இருக்கிறேன். தற்பொழுது சென்னையில் இருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்னை, குற்ற தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்தில் இருக்கும் சிக்கல்கள், ரவுடிசதத்தை கட்டுக்குள் வைப்பது, போலிஸில் இருக்கும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, இவற்றை கண்ட்ரோல் செய்வது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பேன்.

ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரிகின்ற மொழியில் சொல்லி தருவேன். தினமும் ஒரு திட்டத்தை கொண்டுவருவது தேவையில்லை, காவல்துறை அதிகாரிகளும் போலிசார்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே குற்றங்கள் குறையும். ” என்றார்.

மேலும்,. “என்னை நம்பி இந்த பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ள தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு, தமிழகம் நல்லபெயர் எடுக்கும் விதமாக சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும்” என்று கூறியுள்ளார்.