லோகேஷ், வாஞ்சிநாதன் pt web
தமிழ்நாடு

சென்னையை அதிர வைத்த கொலை, தற்கொலை சம்பவம்.. தன்பாலின இளைஞர்களுக்கு இடையே நடந்தது என்ன?

PT WEB

செய்தியாளர் நவீன்

சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த இருவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என விடுதி ஊழியர்கள் நொளம்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உட்பக்கமாக பூட்டி இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரு வாலிபர்களில் ஒருவர் கழுத்து இறுக்கப்பட்டு கட்டிலிலும், மற்றொருவர் தூக்கிட்டுக் கொண்டும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர்.

இதை அடுத்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்தவர்கள் அமைந்தகரையைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்பது தெரிய வந்தது.

பட்டதாரியான லோகேஷும் வாஞ்சிநாதனும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் இருவரும் தன்பாலின உறவில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் லோகேஷுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் சந்தித்திப்பதை லோகேஷ் தவிர்த்து வந்துள்ளார். இதனால் வாஞ்சிநாதனுக்கு லோகேஷ் மீது கோபம் ஏற்பட்ட நிலையில் லோகேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

இருவரும் நொளம்பூரில் உள்ள விடுதியில் சந்தித்த நிலையில், தன்னை விட்டு செல்லக்கூடாது என வாஞ்சிநாதன் கூறியிருக்கலாம் எனவும் இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் லோகேஷை, வாஞ்சிநாதன் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும், லோகேஷை கொலை செய்து விட்டதாக அவரது உறவினரின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு வாஞ்சிநாதனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் லோகேஷை காணவில்லை என அவரது உறவினர்கள் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தன்பாலின உறவில் இருந்த இருவரில் ஒருவருக்கு திருமணம் ஆக இருந்த நிலையில், ஒருவரை கொலை செய்துவிட்டு மற்றொருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.