மணிகண்டன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை | பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த நபர்... மடக்கிப்பிடித்த காவல்துறை!

PT WEB

வடபழனியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர், பாண்டிபஜார் பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் பெண் ஊழியர்கள் பயன்படுத்தும் பாத்ரூமிற்குள் சென்ற போது, அங்கு ஜன்னலில் மறைவாக கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் ஒரு செல்போன் இருந்ததை பார்த்துள்ள்ளார். உடனடியாக அந்த செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

கைதான மணிகண்டன்

இதை அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் பார்த்து பதற்றத்துடன் இளம்பெண்ணிடம் தகராறு செய்து, பின் இளம்பெண்ணை மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இளம்பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், தி.நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (33) என்ற இளைஞரை கைது செய்து அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணையில், கைது செய்யப்பட்ட மணிகண்டன் அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வந்தவர் என்பதும், அருகில் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூம் ஜன்னலில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.