Accused pt desk
தமிழ்நாடு

சென்னை: ஒருமையில் பேசிய டிராபிக் எஸ்ஐ - ஓங்கி அடித்த போதை நபர்... நடந்தது என்ன?

webteam

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது அக்காவை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை காரில் ராயப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே சென்றபோது போலீசார் இவரிடம் மதுபோதை பரிசோதனை செய்தனர்.

chennai anna salai traffic police

இதில் செந்தில்குமார், அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்த நிலையில், அங்கிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சாலமோன், செந்தில்குமாரை ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளார். பதிலுக்கு சாலமோனும் செந்தில்குமாரை தாக்கியுள்ளார்.

இந்நிலையில், தன்னை தாக்கியதாக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சாலமோன் புகார் அளித்தார். அதன் பேரில் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். வாகன ஓட்டிகளை ஒருமையில் பேசுவது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள சாலமோனின் நடவடிக்கைகள் குறித்தும் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.