தமிழ்நாடு

ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்

Sinekadhara

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக கட்சி விதிகளின்படி புதிய பதவிகளை உருவாக்க கட்சிக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது, கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. ஆனால் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். இது அதிமுக விதிகளுக்கு முரணானது எனவும், எனவே ஜெயலலிதா இருந்தபோதுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்துசெய்யவேண்டும் என்று அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒரு உள்கட்சி விவகாரத்தில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை தேர்தல் ஆணையம் ஆராயமுடியாது என்றும், கட்சியின் பிரதிநிதிகள் அளிக்கும் பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டு நிர்வாகிகளை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் எந்தவித தவறுமில்லை என்றுக்கூறி வழக்கை முடித்துவைத்தார்.