தமிழ்நாடு

புத்தாண்டிற்குள் மெரினாவை தூய்மைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்க உத்தரவு

Rasus

புத்தாண்டிற்குள் மெரினா கடற்கரையை தூய்மையாக மாற்ற திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை வடபழனியில் கடந்த ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து வடபழனியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது விசாரணை நடத்த கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர்  அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டிட உரிமையாளருக்கு எதிரான குற்ற வழக்கும், மாநகராட்சி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் நிலுவையில் உள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது சாத்தியமா என சென்னை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு கட்டிட உரிமையாளர் விஜயகுமார் மீதான குற்ற வழக்கில் குற்றப் பத்திரிகையை 1 வாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அப்போது மெரினா கடற்கரை குப்பை கோலமாக காட்சி அளிக்கிறது என வேதனை தெரிவித்த நீதிபதிகள், புத்தாண்டுக்கு முன்னதாக மெரினா கடற்கரையை முழுமையாக சுத்தப்படுத்திட திட்டம் வகுத்து செயல்படுத்தவும் உத்தரவிட்டனர். முதலில் மெரினாவை சுத்தப்படுத்துங்கள், பின்னர் படிப்படியாக மாவட்டம், மாநிலம் முழுவதும் தூய்மை படுத்தலாம் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.